தண்டுவடத்தைப் பலப்படுத்தும் பிரண்டை உப்பு..!!
தண்டுவட பிரச்சனையானது முதுகெலும்புகளின் சிதைவுகளாலேயே ஏற்படுத்தப்படுகின்றது. இது முதுகுவலியின் ஒரு வடிவமாகும். மேலும் இது உலகளாவிய மக்களைப் பாதிக்கும் முக்கியமான மருத்துவ, சமூக, பொருளாதார மற்றும் பொது சுகாதாரப் பிரச்சனைகளுள் ஒன்றாகும்.
குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த இவ்வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை எனலாம். உடல் உழைப்பு என்பது உடலை வருத்தி செய்யும் வேலையை மட்டும் குறிப்பதல்ல. உட்கார்ந்த இடத்தில் மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதும் கூட பொருந்தும். இன்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இளைய தலைமுறையினர் 80% பேர் இந்த முதுகுவலி பிரச்சனையை சந்தித்துவருகிறார்கள்.
நமது உடலில் முதுகு பகுதியில் மொத்தம் 33 விதமான எலும்புகள் உள்ளன. இவை தான் நம்மை உட்காரவும், ஓடவும், நடக்கவும், படுக்கவும் வைக்கின்றன. முதுகு பகுதியின் மேல் முதுகுவலி, கீழ் முதுகுவலி என்று ஒவ்வொரு இடங்களிலும் குறிப்பிட்டு வருவதும் உண்டு. பொதுவான முதுகு வலியும் உண்டு. உடல் ரீதியான சில குறைபாடுகளே முதுகுவலிக்கு காரணமாக அமையும். அத்துடன் முதுகு தண்டுவடத்தில் கிருமித்தொற்று, புற்றுநோய் போன்ற பிரச்சனைகளும் கூட முதுகுவலியை உண்டாக்கிவிடும்.
அடுத்து முதுகுப்பகுதியானது தண்டுவடம், எலும்பு, தசைநார் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியிருக்கின்றது. இந்த பாகத்தில் பாதிப்பு உண்டாகும் போது வலி உண்டாகும். தசைக்கு அதிகப்படியான வேலை கொடுக்கும் போதும், தசை பிடிப்பு பிரச்சனைக்கு உள்ளாகும் போதும் முதுகு வலி பிரச்சனை ஏற்படக்கூடும். மேலும் எப்போதும் மனக்கவலையில் உள்ளவர்கள், அதிக எடை கொண்டிருப்பவர்கள், அதிக உழைப்பில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள், உடலை வருத்தி அதிக நேரம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இவ் முதுகுவலி இயல்பாக வருகிறது.
இவ்வாறு ஏற்படும் முதுகுவலியை சரி செய்து, தண்டுவடத்தை பலப்படுத்தும் அருமருந்தாக சித்த மருத்துவத்தில் பிரண்டைஉப்பு உபயோகிக்கப்படுகிறது. பிரண்டையுப்பை எவ்வாறு தயாரிப்பது, எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று தொடர்ந்து நோக்குவோம்.
பிரண்டை உப்பு செயன்முறை :
முற்றிய பிரண்டை கொடிகளைக் கொண்டுவந்து, கணுக்களைத் தரித்தகற்றி, நடுக்கண்டங்களாகியத் துண்டுகளைக் கல்லுரலில் இட்டு, நன்றாய் இடித்து, கையிற்படாமல் வெள்ளை துணியில் முடிச்சுக்கட்டித் தொங்கவிட்டு, கையிற்படாமல் இரு மரசட்டங்களால் கிட்டிக்கட்டி, அழுத்திப் பிழிந்தெடுத்து, கிடைக்கும் அரைப்படிச்சாற்றை ஒரு மட்குடுவையிலிட்டு, அதனில் கால்படி கறியுப்பைப் போட்டு, அடுப்பின் மேலேற்றி, சிறுதீயாக எரித்து, சாறு சுண்டுந்தருவாயில் குடுவையைக் கீழிறக்கி, வாய்க்கு ஓடு மூடி, சீலைசெய்து காய்ந்த பின், 30 வறட்டியில் புடமிடவும்.
புடம் ஆறிய பின்னர், குடுவையிலிட்ட உப்பைக் கல்வத்திலிட்டு அரைக்கக் கருப்பாக இருக்கும். இவ் உப்பே பிரண்டையுப்பு ஆகும். இதனை மண்ணினாலான கலச பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை :
வேளைக்கு 2-3 குன்றியெடை (300mg) ஒருமிடறு அன்னக்கொதிசலம், புளிப்புமோர், பழச்சாறு முதலியவற்றிலொன்றில் அனுபானஞ்செய்து தினம் 2 வேளை கொடுக்கவும்.

Thank you for the information Doc.Siddha.
ReplyDeleteI too have this problem
We wish you a speedy recovery. Thank you. 🙏
Delete