தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- வர்ம மருத்துவம்!!
வர்மம் என்ற சொல்லுக்கு ‘உயிர் - ஆற்றல் பற்றிய அறிவியல்' எனப்பொருள். ஆதி மருத்துவக் கலையான இந்த வர்மக்கலை சிவபிரானிடமிருந்தே உபதேசிக்கப்பட்டது என்கிறார்கள் சித்தர்கள். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒருமுறை மலைகளில் உலாவிக்கொண்டிருந்தபோது வேடன் ஒருவன் மயக்கமுற்று வீழ்ந்திருந்தான். அதைக் கண்ட சிவன் தன் கைப் பொற்பிரம்பால் அவனைத் தட்ட வேடன் மயக்கம் நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பினான். இதைக்கண்ட பார்வதி தேவி, "என்ன நிகழ்ந்தது?" என்று வினவினாள். அப்போது மனித உடலில் ஓடும் வர்மப்புள்ளிகளையும் அவற்றின் மூலம் நோய்களைச் சரிசெய்யும் கலையையும் பார்வதி தேவிக்கு உபதேசித்தார் ஈசன்.
பார்வதி தேவி இந்த மருத்துவமுறையை முருகப்பெருமானுக்கு உபதேசிக்க முருகக்கடவுளோ அகத்திய மாமுனிக்கு அருளிச்செய்தார். அகத்தியருக்கு முருகன் வர்மக் கலையை உபதேசித்த தலம், 'வேளிமலை' என்கிறது தெட்சிணாமூர்த்தி காவியம். அகத்தியர் இந்தக் கலையை சித்தர்கள் பலருக்கும் உபதேசித்தார்.
உற்சாகமான வாழ்க்கைக்கு நோயில்லாத உடல் வேண்டும். நோயற்ற உடலைப்பெற முறையான வாழ்க்கை வாழ வேண்டும். நோய் வந்தாலும் அதை மருந்தில்லா மருத்துவ முறையால் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு சித்தர்கள் உபதேசித்த 'வர்மம்' எனும் அற்புதக் கலை மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.
108 வர்ம புள்ளிகள்:
மனித உடலில் மொத்தம் 108 வர்மப் புள்ளிகள் அதாவது உயிர்நிலைகள் உள்ளன என்கின்றன சித்த நூல்கள். அவையே ஒரு மனிதன் உயிரோடு இருப்பதற்கும், இயங்குவதற்கும், நோய் நிலையை அடைவதற்கும், சுகமடைவதற்கும் அல்லது இறப்பதற்கும் காரணமாக அமைகின்றன.
உடலின் ஒவ்வோர் ஆதாரங்களுக்கும் அதற்கென குறிப்பிட்ட வர்மப் புள்ளிகள் உண்டு. இந்தப் புள்ளிகளை ஒரு வர்ம ஆசான் தன்னுடைய விரல்களின் மூலம் அழுத்தித் தடவித் தூண்டுவதன் மூலம், அந்த ஆதாரத்தைத் திறக்கவோ அல்லது தூண்டவோ செய்யலாம். அதனால் குறிப்பிட்ட அந்தப் பாகத்தைச் செயல்படுத்தவும் ஏதேனும் குறையிருந்தால் சரி செய்யவும் முடியும் என்கிறது வர்மம். உடலில் 108 வர்மப்புள்ளிகள் இருந்தாலும் முக்கியமான புள்ளிகள் யாவும் கைகளில் ஒருங்கிணைவதால், பெரும்பாலும் கைகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வர்மப்புள்ளிகள் இணையும் உள்ளங்கைகளில் அழுத்தம் கொடுப்பது, வண்ணம் தீட்டுவது (கலர் தெரபி), பச்சைப்பயறு, மிளகு, வெந்தயம், கடுகு போன்ற விதைகள் வைத்து அழுத்துவது (Seed theraphy) போன்ற முறைகளால் அநேக நோய்களை குணப்படுத்தி வருகிறது வர்ம வைத்திய சாஸ்திரம். இது ‘சுஜோக்’ சிகிச்சை முறை என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமான சிகிச்சையாக உள்ளது. இது நம் சித்தர் பெருமக்களிடமிருந்து தோன்றிய எளிய வர்ம சிகிச்சை முறையே.
#Doctorsidda #Varmam #VarmaTherapy

Comments
Post a Comment